Thursday, October 16, 2014

தமிழ்த் தாயின் தவப் புதல்வர் அறிஞர் அண்ணா!



 

 
தமிழக அரசியல் வரலாற்றில் தந்தை பெரியாரின் தொண்டராய்த் திராவிடர் கழகத்தில் (நீதிக் கட்சியே பின்பு திராவிடர் கழகமாக மாறியது) களமிறங்கிய காஞ்சிபுரம் திரு. நடேசன் அண்ணாதுரை அவர்கள் பின்பு பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாய்த் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கியதும், தி.மு.க என்று அழைக்கப்பட்ட/படுகின்ற அவ்வரசியல் கட்சி பின்பு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்ததும் தமிழர்களாகிய நாம் நன்கறிந்ததே.

மிகச் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன்வாய்ந்த திரு. அண்ணாதுரை அவர்கள் ’அறிஞர் அண்ணா’ என்று கழகத் தொண்டர்களாலும், தமிழக மக்களாலும் அன்போடும், ஆசையோடும் அழைக்கப்பட்டவர்.

தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் ’spontaneous overflow’ என்று வியக்கத்தக்க வகையில் ஆற்றொழுக்காகப் பேசக்கூடியவர் அண்ணா. அதுமட்டுமா? மொழிபெயர்ப்புக் கலையிலும் வித்தகர்!

அதற்கான சான்று…

ஒருசமயம், சென்னையில் ஒருவிழாவில் ஆங்கிலத்தில் உரையாற்றவிருந்த சிறந்த கல்வியாளரான திவான் பகதூர் சர். இராமசாமி முதலியார் அவர்களின் ஆங்கிலப் பேச்சைத் தமிழில் மொழிபெயர்க்க அண்ணா அழைக்கப்பட்டிருந்தார்.
இந்தியாவில் வியாபாரம் செய்வதற்காக வந்த வெள்ளையனான இராபர்ட் கிளைவ் பின்பு இந்தியாவையே கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரனாக மாறினான் எனும்பொருளில் “He came to India as Robert Clive and became Robber Clive” என்று தன் பேச்சினூடே சொல்விளையாடல் நிகழ்த்தினார் இராமசாமி முதலியார்.

அவையிலிருந்தோர் அனைவரும் இதனை மிகவும் ரசித்ததோடல்லாமல் அண்ணா இத்தொடரை எவ்வாறு தமிழில் மொழிபெயர்க்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடும் ஆவலோடும் முதலியாருக்கு அருகில் நின்றிருந்த அண்ணாவையே விழி இமைக்காது பார்த்தபடி அமர்ந்திருந்தனராம்.

அண்ணாவோ, ”திரு. கிளைவாக இந்தியா வந்தவன் பின்பு திருடன் கிளைவாக மாறினான்” என்று அநாயாசமாக அதனை மொழிபெயர்க்கவும் அனைவரும் வியப்பில் விழிவிரிய விண்ணதிரக் கரவொலி எழுப்பினராம். அண்ணாவின் மொழிபெயர்ப்புத் திறன்கண்ட முதலியாரும் அவரை ஆரத்தழுவித் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாராம்.

அறிஞர் அண்ணாவைப் பொறுத்தவரை அவர் அரசியல் தலைவராக மட்டுமல்லாது திரைப்பட வசனகர்த்தாவாகவும், நாடக ஆசிரியராகவும் முத்திரை பதித்துத் தமிழ்நாட்டு ‘பெர்னார்ட்ஷா’ எனும் சிறப்புப் பெற்றவர்.

“வேலையற்றதுகளின் உள்ளங்களில் விபரீத எண்ணங்கள்; சாலையோரத்திலே சலசலப்பு; மரத்திலே பிணம்; மடியிலே பணம்; அரசே இது காலத்தின் குறி” என்பது (எஸ்.எஸ். ராஜேந்திரன், கே. ஆர். ராமசாமி போன்றோர் நடித்த) ’சொர்க்க வாசல்’ எனும் படத்தில் அவர் எழுதிய புகழ்பெற்ற வசனம்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்பது அண்ணாவின் மற்றொரு புகழ்பெற்ற வசனம்.

தன் மேடைப் பேச்சுக்களால் அனைவரையும் சொக்கவைத்தவர் ஒருவர் தமிழகத்தில் உண்டென்றால் அது அண்ணாவாகத்தான் இருக்கமுடியும்!!

ஒருமுறை அரசியல் கூட்டமொன்றில் பேசுவதற்காக அண்ணா ஓரிடத்திற்குச் (ஊரின் பெயர் நினைவில்லை) செல்லவேண்டியிருந்தது. அவர் வருவதாகச் சொன்னநேரம் கடந்துவிட்டிருந்தது; அவரது பேச்சைக் கேட்க ஆவலோடு வந்தவர்களோ இரவு எத்தனை மணியானாலும் சரி…அண்ணாவின் பேச்சைக் கேட்டுவிட்டுத்தான் அவ்விடம் விட்டு நகர்வது என்ற உறுதியோடு அங்கேயே பாய், தலையணை சகிதம் உட்கார்ந்துவிட்டனர். கடைசியாக விழா நாயகர் ‘அண்ணா’ வந்தார். தன் கடிகாரத்தைப் பார்த்தார். அப்போது மணி இரவு 10:30.

’சர்’ என்று யாருமறியாவண்ணம் மூக்குப் பொடியை உறிஞ்சினார். :-) தொண்டையைச் செருமிக் கொண்டார். தன் வெண்கலக் குரலில்,

”மாதமோ சித்திரை
மணியோ பத்தரை
உங்களைத் தழுவுவதோ நித்திரை  
மறக்காது இடுவீர் எமக்கு (திமுக) முத்திரை” என்றாரே பார்க்கலாம். எழுந்த கரவொலியில் வானமே அதிர்ந்ததாம்! 
 
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு”, ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” போன்றவை அண்ணாவின் புகழ்பெற்ற வேறுசில சொல்லாடல்கள். இவற்றில் ’ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்பது திருமூலரின் திருமந்திரம்; அண்ணா இதனை அடிக்கடிப் பயன்படுத்தியதால் பலர் இது அண்ணா உருவாக்கிய சொற்றொடர் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு அண்ணாவின் மொழியாளுமை மக்களைக் கட்டிப்போட்டிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

அரசியலிலே அண்ணாவை ஓர் மிதவாதி என்றே குறிப்பிடலாம். எதிலும் தீவிரவாதப் போக்கை அவர் கைக்கொண்டதில்லை. (அதனை அவருடைய குறையாகவும் சிலர் விமரிசித்தனர்.) அரசியலில் எதிர்க்கட்சியினரையும் எதிரிகளாய் எண்ணாமல் அவர்களோடும் அன்பாகப் பழகியவர் அவர். தரக்குறைவான சொற்களால் யாரையும் விமரிசிக்காதவர்; அரசியலிலும் நாகரிகத்தைப் பேணியவர்.

கடவுள் மறுப்பிலும் பெரியார் அளவிற்கு அவர் முனைப்புக் காட்டினாரில்லை. நான் ”தேங்காயும் உடைப்பதில்லை; பிள்ளையாரும் உடைப்பதில்லை” என்பதே அண்ணாவின் கொள்கையாக இருந்தது. (It sounds he must be an Agnostic like Pandit Nehru.)

தமிழக முதலமைச்சராக இரண்டாண்டுகள்கூட முழுதாகப் பதவி வகிக்கவில்லை அண்ணா என்பது மிகவும் வருந்தத்தக்கது. எனினும், தான் பதவியிலிருந்த சிறிது காலத்திலேயே ‘மதராஸ்’ எனும் பெயரை மாற்றித் ’தமிழ்நாடு’ எனும் புதிய பெயரைத் தமிழகத்திற்குத் தந்தார். 1968-இல் சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்திக் காட்டினார்.

அசாதாரணத் திறமைகளும், பல்துறை அறிவும், பகட்டற்ற எளிமையும் கொண்ட அறிஞர் அண்ணா எப்போதும் படித்துக் கொண்டிருப்பதையே விரும்புவாராம் (he was an avid reader). தன் உடல்நிலை மிகவும் மோசமடைந்து காலனின் வரவை அவர் எதிர்பார்த்திருந்த வேளையிலும்கூடத் தன் மரணம் பற்றிக் கவலைப்படாமல் தன் தலைமாட்டில் வைத்திருந்த புத்தகங்களைப் படித்துமுடிக்காமல் போகப் போகிறோமே என்றுதான் கலங்கினாராம். :-(

தன் கவிதைகளால் பாமரர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பாரதிபோல், தன் தனித்தன்மை வாய்ந்த மேடைப் பேச்சுக்களாலும், அற்புதமான எழுத்துக்களாலும் பாமர மக்களின் உள்ளங்களில் பாசமிகு ’அண்ணனாக’ இடம்பிடித்தவர் அறிஞர் அண்ணா. 

அத்தகைய தன்னேரிலாத தலைவரை, தமிழ்த் தாயின் தவப் புதல்வரை நாம் என்றும் போற்றுவோம்!!