Thursday, February 26, 2015

மங்கையர் திலகம்!


வயல்களும் வாவிகளும் நிறைந்த திருமுனைப்பாடி நாட்டில் எழில் கொஞ்சும் ஊர் ஒன்று இருந்தது; அதன் பெயர் திருவாமூர். அங்கே வேளாளர் குடியைச் சேர்ந்த, சிவபக்தியிற் சிறந்த புகழனார் மாதினியார் என்ற இணையர் வாழ்ந்து வந்தனர். ’உடம்பொடு உயிரிடையென்ன’ (உடலும் உயிரும் போல) கருத்தொருமித்துக் காதலோடு வாழ்ந்த அவ்விருவரின் இல்லறத்தை மேலும் இனிமையாக்கப் பெண் மகவு ஒன்று பிறந்தது.

அக்குழந்தையின் தெய்வீக அழகு ’திருமகளே புவிக்கு வந்து பிறந்துவிட்டாளோ!’ எனப் பிரமிக்கும்வண்ணம் இருந்தது. அக்குழந்தையைக் கண்டு உளம்பூரித்த தாய்தந்தையர் பின்னாளில் அது மங்கையர்குலத் திலகமாய் ஒளிவீச வேண்டும் என்று திருவுளம் கொண்டனரோ என்னவோ…அதற்குத் ’திலகவதி’ எனும் பொருத்தமான பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர்.