Thursday, October 16, 2014

தமிழ்த் தாயின் தவப் புதல்வர் அறிஞர் அண்ணா!



 

 
தமிழக அரசியல் வரலாற்றில் தந்தை பெரியாரின் தொண்டராய்த் திராவிடர் கழகத்தில் (நீதிக் கட்சியே பின்பு திராவிடர் கழகமாக மாறியது) களமிறங்கிய காஞ்சிபுரம் திரு. நடேசன் அண்ணாதுரை அவர்கள் பின்பு பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாய்த் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கியதும், தி.மு.க என்று அழைக்கப்பட்ட/படுகின்ற அவ்வரசியல் கட்சி பின்பு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்ததும் தமிழர்களாகிய நாம் நன்கறிந்ததே.

மிகச் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன்வாய்ந்த திரு. அண்ணாதுரை அவர்கள் ’அறிஞர் அண்ணா’ என்று கழகத் தொண்டர்களாலும், தமிழக மக்களாலும் அன்போடும், ஆசையோடும் அழைக்கப்பட்டவர்.

தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் ’spontaneous overflow’ என்று வியக்கத்தக்க வகையில் ஆற்றொழுக்காகப் பேசக்கூடியவர் அண்ணா. அதுமட்டுமா? மொழிபெயர்ப்புக் கலையிலும் வித்தகர்!

அதற்கான சான்று…

ஒருசமயம், சென்னையில் ஒருவிழாவில் ஆங்கிலத்தில் உரையாற்றவிருந்த சிறந்த கல்வியாளரான திவான் பகதூர் சர். இராமசாமி முதலியார் அவர்களின் ஆங்கிலப் பேச்சைத் தமிழில் மொழிபெயர்க்க அண்ணா அழைக்கப்பட்டிருந்தார்.
இந்தியாவில் வியாபாரம் செய்வதற்காக வந்த வெள்ளையனான இராபர்ட் கிளைவ் பின்பு இந்தியாவையே கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரனாக மாறினான் எனும்பொருளில் “He came to India as Robert Clive and became Robber Clive” என்று தன் பேச்சினூடே சொல்விளையாடல் நிகழ்த்தினார் இராமசாமி முதலியார்.

அவையிலிருந்தோர் அனைவரும் இதனை மிகவும் ரசித்ததோடல்லாமல் அண்ணா இத்தொடரை எவ்வாறு தமிழில் மொழிபெயர்க்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடும் ஆவலோடும் முதலியாருக்கு அருகில் நின்றிருந்த அண்ணாவையே விழி இமைக்காது பார்த்தபடி அமர்ந்திருந்தனராம்.

அண்ணாவோ, ”திரு. கிளைவாக இந்தியா வந்தவன் பின்பு திருடன் கிளைவாக மாறினான்” என்று அநாயாசமாக அதனை மொழிபெயர்க்கவும் அனைவரும் வியப்பில் விழிவிரிய விண்ணதிரக் கரவொலி எழுப்பினராம். அண்ணாவின் மொழிபெயர்ப்புத் திறன்கண்ட முதலியாரும் அவரை ஆரத்தழுவித் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாராம்.

அறிஞர் அண்ணாவைப் பொறுத்தவரை அவர் அரசியல் தலைவராக மட்டுமல்லாது திரைப்பட வசனகர்த்தாவாகவும், நாடக ஆசிரியராகவும் முத்திரை பதித்துத் தமிழ்நாட்டு ‘பெர்னார்ட்ஷா’ எனும் சிறப்புப் பெற்றவர்.

“வேலையற்றதுகளின் உள்ளங்களில் விபரீத எண்ணங்கள்; சாலையோரத்திலே சலசலப்பு; மரத்திலே பிணம்; மடியிலே பணம்; அரசே இது காலத்தின் குறி” என்பது (எஸ்.எஸ். ராஜேந்திரன், கே. ஆர். ராமசாமி போன்றோர் நடித்த) ’சொர்க்க வாசல்’ எனும் படத்தில் அவர் எழுதிய புகழ்பெற்ற வசனம்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்பது அண்ணாவின் மற்றொரு புகழ்பெற்ற வசனம்.

தன் மேடைப் பேச்சுக்களால் அனைவரையும் சொக்கவைத்தவர் ஒருவர் தமிழகத்தில் உண்டென்றால் அது அண்ணாவாகத்தான் இருக்கமுடியும்!!

ஒருமுறை அரசியல் கூட்டமொன்றில் பேசுவதற்காக அண்ணா ஓரிடத்திற்குச் (ஊரின் பெயர் நினைவில்லை) செல்லவேண்டியிருந்தது. அவர் வருவதாகச் சொன்னநேரம் கடந்துவிட்டிருந்தது; அவரது பேச்சைக் கேட்க ஆவலோடு வந்தவர்களோ இரவு எத்தனை மணியானாலும் சரி…அண்ணாவின் பேச்சைக் கேட்டுவிட்டுத்தான் அவ்விடம் விட்டு நகர்வது என்ற உறுதியோடு அங்கேயே பாய், தலையணை சகிதம் உட்கார்ந்துவிட்டனர். கடைசியாக விழா நாயகர் ‘அண்ணா’ வந்தார். தன் கடிகாரத்தைப் பார்த்தார். அப்போது மணி இரவு 10:30.

’சர்’ என்று யாருமறியாவண்ணம் மூக்குப் பொடியை உறிஞ்சினார். :-) தொண்டையைச் செருமிக் கொண்டார். தன் வெண்கலக் குரலில்,

”மாதமோ சித்திரை
மணியோ பத்தரை
உங்களைத் தழுவுவதோ நித்திரை  
மறக்காது இடுவீர் எமக்கு (திமுக) முத்திரை” என்றாரே பார்க்கலாம். எழுந்த கரவொலியில் வானமே அதிர்ந்ததாம்! 
 
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு”, ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” போன்றவை அண்ணாவின் புகழ்பெற்ற வேறுசில சொல்லாடல்கள். இவற்றில் ’ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்பது திருமூலரின் திருமந்திரம்; அண்ணா இதனை அடிக்கடிப் பயன்படுத்தியதால் பலர் இது அண்ணா உருவாக்கிய சொற்றொடர் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு அண்ணாவின் மொழியாளுமை மக்களைக் கட்டிப்போட்டிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

அரசியலிலே அண்ணாவை ஓர் மிதவாதி என்றே குறிப்பிடலாம். எதிலும் தீவிரவாதப் போக்கை அவர் கைக்கொண்டதில்லை. (அதனை அவருடைய குறையாகவும் சிலர் விமரிசித்தனர்.) அரசியலில் எதிர்க்கட்சியினரையும் எதிரிகளாய் எண்ணாமல் அவர்களோடும் அன்பாகப் பழகியவர் அவர். தரக்குறைவான சொற்களால் யாரையும் விமரிசிக்காதவர்; அரசியலிலும் நாகரிகத்தைப் பேணியவர்.

கடவுள் மறுப்பிலும் பெரியார் அளவிற்கு அவர் முனைப்புக் காட்டினாரில்லை. நான் ”தேங்காயும் உடைப்பதில்லை; பிள்ளையாரும் உடைப்பதில்லை” என்பதே அண்ணாவின் கொள்கையாக இருந்தது. (It sounds he must be an Agnostic like Pandit Nehru.)

தமிழக முதலமைச்சராக இரண்டாண்டுகள்கூட முழுதாகப் பதவி வகிக்கவில்லை அண்ணா என்பது மிகவும் வருந்தத்தக்கது. எனினும், தான் பதவியிலிருந்த சிறிது காலத்திலேயே ‘மதராஸ்’ எனும் பெயரை மாற்றித் ’தமிழ்நாடு’ எனும் புதிய பெயரைத் தமிழகத்திற்குத் தந்தார். 1968-இல் சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்திக் காட்டினார்.

அசாதாரணத் திறமைகளும், பல்துறை அறிவும், பகட்டற்ற எளிமையும் கொண்ட அறிஞர் அண்ணா எப்போதும் படித்துக் கொண்டிருப்பதையே விரும்புவாராம் (he was an avid reader). தன் உடல்நிலை மிகவும் மோசமடைந்து காலனின் வரவை அவர் எதிர்பார்த்திருந்த வேளையிலும்கூடத் தன் மரணம் பற்றிக் கவலைப்படாமல் தன் தலைமாட்டில் வைத்திருந்த புத்தகங்களைப் படித்துமுடிக்காமல் போகப் போகிறோமே என்றுதான் கலங்கினாராம். :-(

தன் கவிதைகளால் பாமரர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பாரதிபோல், தன் தனித்தன்மை வாய்ந்த மேடைப் பேச்சுக்களாலும், அற்புதமான எழுத்துக்களாலும் பாமர மக்களின் உள்ளங்களில் பாசமிகு ’அண்ணனாக’ இடம்பிடித்தவர் அறிஞர் அண்ணா. 

அத்தகைய தன்னேரிலாத தலைவரை, தமிழ்த் தாயின் தவப் புதல்வரை நாம் என்றும் போற்றுவோம்!!


அன்னைத் தமிழுக்கு அணிசெய்த மு. வரதராசனார்!



தமிழகத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனையோ அறிஞர்களும், புலவர் பெருமக்களும் தோன்றித் தமிழின் வளர்ச்சிக்கும், தமிழரின் மறுமலர்ச்சிக்கும் வித்திட்டுள்ளனர். அவ்வகையில், தமிழரின் தலைசிறந்த அடையாளமாய்த் திகழும் சங்கத்தமிழ் நூல்களையெல்லாம் கரையானிடமிருந்து காத்து, நம் கைகளில் தவழச் செய்தவர் ’தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. எனில், அவ்விலக்கியங்களையெல்லாம் எளிய தமிழ் நடையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பல கட்டுரைகளாகவும், ஆராய்ச்சி நூல்களாகவும் எழுதி வெளியிட்ட பெருமை ’மு.வ’ என்று தமிழ் மக்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற முனைவர் மு. வரதராசனார் அவர்களைச் சாரும்.

அறிவு முதிர்ச்சிக்கு அடையாளமான அகன்ற நெற்றி, அன்பும் அறிவும் சுடர்விடும் ஒளி பொருந்திய கண்கள், வெள்ளை உள்ளத்தை வெளிக்காட்டும் பளிச்சென்ற புன்னகை இவற்றோடு கூடிய தோற்றப் பொலிவினாலும், தமிழுக்குப் புதிய வரலாறு படைத்த தன் அற்புத எழுத்துக்களாலும் அனைவரையும் ஈர்த்த மு.வ., ஏப்ரல் 25, 1912-ஆம் ஆண்டு திருப்பத்தூரில் பிறந்தார். வேலம் என்ற ஊரிலும் பின்பு வாலாசாவிலும் தொடக்கக்கல்வி பயின்ற அவர், பின்னர் 1935-ஆம் ஆண்டு தமிழ்ப் புலவர் தேர்வு எழுதி அதில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்தார். தணியாத ஆர்வமும், புலமையும் தமிழ்பால் கொண்ட வரதராசனார் 1948-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்.

1928-ஆம் ஆண்டு எழுத்தராகத் தன் பணியைத் தொடங்கிய அவர் பின்பு மாநகராட்சிப் பள்ளியொன்றில் தமிழாசிரியராகவும், அதனைத் தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், பின்னர் அங்கேயே தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். மு.வ. அங்கு பணிபுரிகின்றார் என்ற காரணத்திற்காகவே ‘பச்சையப்பனில் படிக்க இச்சை கொண்டோர் பலர்’ இருந்திருக்கின்றனர் அப்போது. (எப்படி அறிஞர் அண்ணா அங்குப் படித்தார் என்று விரும்பிச் சேர்ந்தார்களோ அதுபோல் இதுவும்!) :-)

சென்னைப் பல்கலைக்கழகத்திலும் சில காலம் தமிழ்த்துறைத் தலைவராகப் பதவி வகித்த வரதராசனார், தன் பணிக்காலத்தின் இறுதிப் பகுதியில் (1971-74 வரையிலான காலகட்டத்தில்) மதுரைப் பல்கலைக்கழகத்தின் புகழ்சால் துணைவேந்தராகவும் பதவி வகித்திருக்கின்றார்.

சிறந்த தமிழறிஞரும், சிந்தனையாளருமான மு.வ. சமுதாய ஒழுக்கத்திலும், தனிமனித ஒழுக்கத்திலும் பெரிதும் அக்கறை கொண்டவர். தன் படைப்புக்கள் அனைத்திலும் இதனை அவர் வலியுறுத்தத் தவறவில்லை என்றே கூறலாம். நாவல், சிறுகதை, நாடகம், இலக்கியக் கட்டுரைகள், சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று நூல்கள், மொழியியல் நூல்கள் என்று நம் தாய்த்தமிழில் அவர் தொடாத - அவர் கரம் படாத துறைகளே இல்லை எனும் அளவிற்குப் பல்வேறு களங்களிலும் தன் ஆக்கங்களைத் தந்து அன்னைத் தமிழுக்கு அணிசேர்த்துள்ளார் அப்பேரறிஞர்!

கடித இலக்கியம் என்ற புதியதோர் இலக்கியத்துறையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. தம்பிக்கு, தங்கைக்கு, அன்னைக்கு, நண்பர்க்கு என்று அனைத்து உறவுகட்கும், நண்பர்கட்கும் ’நயத்தகு நாகரிக நடையில்’ மடல் வரையக் கற்றுத்தந்த பண்பாளர் மு.வ. அவர்கள். (பின்பு இக்கடித இலக்கியத்தை அரசியல் துறையில் பயன்படுத்திப் பெருவெற்றி கண்டவர் அறிஞர் அண்ணா என்பது நாமறிந்ததே.) 

மு.வ.வின் கதைகளில்கூட வட்டார வழக்கை நாம் காணமுடியாது. கதை மாந்தர்களிடையே நிகழும் உரையாடல்கள் அனைத்துமே அவர்கள் பாமரராயினும் சரி, படித்தோராயினும் சரி வேறுபாடுகளற்ற தரமான ஒரே மொழி நடையையே கொண்டிருந்தன என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

அவருடைய கள்ளோ காவியமோ?, கரித்துண்டு, அகல் விளக்கு முதலிய நாவல்கள் அன்றைய தமிழ்ச் சமுதாயத்தினரிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன எனில் மிகையில்லை. அவருடைய ’அகல் விளக்கு’ சாகித்திய அகாதெமியின் பரிசை வென்ற சிறந்த நாவலாகும்.

இலக்கியத் திறன், இலக்கியச் செல்வம், இளங்கோவடிகள், கண்ணகி, மாதவி, குறுந்தொகை விருந்து, நெடுந்தொகை விருந்து (அகநானூற்றிற்கு நெடுந்தொகை என்றோர் பெயருண்டு), ஓவச் செய்தி...இப்படி எண்ணிறந்த இலக்கியக் கட்டுரைகளை எழுதிக் குவித்து, கற்க அரிதான சங்க நூல்கள்மீது தமிழ் மக்களுக்கு ஆழமான காதலை ஏற்படுத்தியவர் வரதராசனார்.

சாகித்திய அகாதமியின் வேண்டுகோளுக்கிணங்கத் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதும் அரும்பணியை மேற்கொண்டு அம்முயற்சியில் பரவலான வரவேற்பும், வெற்றியும் கண்டவர் மு.வ. 62 ஆண்டுகளே வாழ்ந்த மு.வ., எண்பதுக்கும் மேற்பட்ட சிறந்த நூல்களைப் படைத்த சாதனையாளர். அவருடைய நூல்கள் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது அவற்றின் தரத்திற்கும், மு.வ.வின் திறத்திற்கும் சான்று பகர்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக இன்று(ம்) மு.வ. அனைவராலும் நினைவுகூரப்படுவது அவருடைய எளிய திருக்குறள் தெளிவுரைக்காக. அழகுத் தமிழில் அனைத்துத் தமிழரும் எளிதில் விளங்கிக்கொள்ளுகின்ற வகையில், அரசியல் சார்போ, மதச் சாயமோ, அறிவுக்குப் பொருந்தாத புதிய விளக்கங்களோ இன்றி இத்தெளிவுரையைத் ’தெளிந்ததோர் நல்லுரை’யாய்ப் படைத்த தமிழ்ச் சான்றோர் மு.வ. அவர்கள்.  

தன் உயரிய படைப்புக்களாலும், சிந்தனைகளாலும் தமிழ்கூறு நல்லுலகில் நிலைத்ததோர் இடத்தைப் பெற்றுவிட்ட மு.வ.,
’மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே’ என்ற புறப்பாட்டிற்கு இலக்கணமாய்த் திகழ்கின்றார் என்பதில் ஐயமுண்டோ?