Wednesday, December 17, 2014

வந்தனை செய்வோம் கந்தனை!

   
கார்த்திகை மாதம் பல்வேறு சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டது. மூலமுதற்பொருளாகிய சிவபெருமான் தன் அடிமுடி காணவியலாத திருமாலுக்கும், பிரமனுக்கும் சோதி வடிவாய்த் திருவண்ணாமலையில் காட்சி தந்தது இக்கார்த்திகை மாத முழுமதி நாளிலேயே என்கின்றனர் பௌராணிகர்கள். மணிவாசகப் பெருமானும் திருவாசகத்தில்,

அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ?
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ. (திருச்சாழல்: 260) என்று அழலுருவாய் நின்ற அரனின் சிறப்பைப் பேசுகின்றார்.

சிவனாருக்கு மட்டுமன்று அவர் மகனாருக்கும் உகந்தது இக்கார்த்திகை மாதம். மாதங்களில் நான் மார்கழி என்றான் கண்ணபெருமான். அதுபோல் மாதங்களில் கார்த்திகையாகத் திகழ்பவன் கண்ணுதலானின் மகனான கந்தன். ஆம்…கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரமும், பூர்ணிமையும் சேர்ந்த நன்னாளில்தான் அழகன்முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து புறப்பட்ட ஆறு தீப்பொறிகளிலிருந்து தோன்றினான் என்கின்றன புராணங்கள். அத்தீப்பொறிகள் சரவணப் பொய்கையிலிருந்த ஆறு தாமரை மலர்களில் விழுந்து ஆறு குழந்தைகளானதும், அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்டிர் அறுவர் அன்போடு வளர்த்ததும் நாமறிந்த செய்திகளே.

பின்பு, உமையம்மை அந்த ஆறு குழந்தைகளையும் ஆசையோடு அணைக்க, அவை ஒன்றுசேர்ந்து ஒரே குழந்தையாய் உருப்பெற்றன எனவும், அதுகண்ட உமாதேவியார் உவப்போடு அக்குழந்தையை ”(ஸ்)கந்தனே!” என்று அழைத்ததாகவும் புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன. கந்தன் என்ற பெயருக்கு ’ஒன்றாக இணைந்தவன்’ எனப் பொருள். கார்த்திகைப் பெண்டிரின் அரவணைப்பில் வளர்ந்தமையால் ‘கார்த்திகேயன்’ என்ற பெயராலும் அவன் அழைக்கப்படுகிறான். (கந்தன் வைகாசி விசாகத்தில் தோன்றியவன்; அதனால் விசாகன் என்றொரு பெயர் அவனுக்குண்டு என்றொரு கருத்தும் சொல்லப்படுகின்றது.) 

தேவர்களுக்கும் அவுணர்களுக்கும் நடந்த போரில் தேவர்களின் சார்பாய்ப் போரிட்டு அவர்களைக் காக்கவே முருகனின் திருஅவதாரம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. தேவர்களைக் காக்கப் பிறந்த முருகவேள் பின் மானிடரைக் காக்கும் கடவுளாயும் ஆனான். தமிழ்மக்களின் ‘உள்ளங்கவர் கள்வனான’ அவன், ’தமிழ்க் கடவுள்’ என்ற பெயரானும் குறிக்கப்படுகின்றான். அதனாலன்றோ மலைப் பகுதியைத் தம்மிடமாகக் கொண்ட குறிஞ்சி நிலமக்கள் இக்குமரக் கடவுளைக் குன்றுறை தெய்வமாக்கி அழகுபார்த்தனர்; தம் குலதெய்வமாகக் கொண்டாடினர். 

இவ்வழகனை, குழகனைச் ’சேயோன்’ என்று விளிக்கின்ற தொல்காப்பியம்,
’சேயோன் மேய மைவரை உலகமும்’ (சிவனின் சேயான முருகனை அல்லது சிவந்த நிறமுடைய முருகனைத் தலைவனாகக் கொண்டது மலைநாடு) என்று அவனுடைய மலைநாட்டை வரையறை செய்கின்றது. குன்றுகள் தோறும் இக்குறிஞ்சிக் கோமானே குடிகொண்டிருப்பதை இன்றும் நாம் காணமுடியும்.

பத்துப்பாட்டு நூல்களில் முதலாவதாக வைத்தெண்ணப்படுகின்ற ’திருமுருகாற்றுப்படை’ முருகனின் சிறப்புக்களையும், அவன் சூரரை வென்ற செய்திகளையும், அவனுடைய அறுபடை வீடுகளையும் விரிவாகப் பேசுகின்றது. இந்நூலில் முருகனின் ஆறுமுகங்களின் இயல்பை விளக்கவந்த நூலாசிரியர் நக்கீரர்,

”முருகனின் ஒருமுகம் பெருமைமிகு இவ்வுலகமானது இருளிலிருந்து விடுபட்டு விளக்கமுறும் வகையில் பல கிரணங்களையும் தோற்றுவித்தது (உலகிற்கு ஒளி தந்தது); ஒருமுகம் தன்மேல் அன்புகொண்ட அடியார்கள் துதிக்க, அதனால் மகிழ்வெய்தி அவர் வேண்டுவனவற்றையெல்லாம் காதலோடு (வரமாய்) அளித்தது; ஒருமுகம் வேதநெறி வழுவாத அந்தணர்கள் செய்யும் யாகங்களுக்குத் தீங்கு நேரலாகாது எனும் நினைவோடிருந்தது; ஒருமுகம் இதுவரை அறிந்துகொள்ள முடியாத வேதங்களிலும் நூல்களிலுமுள்ள நுட்பமான பொருள்களை ஆராய்ந்து முனிவர்களும் மகிழ்ந்து களிக்கும் வகையில் அவற்றை உணர்த்தித் திங்கள்போல்  எல்லாத் திசைகளிலும் ஒளியை வழங்கிக் கொண்டிருந்தது; ஒருமுகம் அவுணர்கள்பால் கோபம் கொண்டுக் களவேள்வி வேட்டது (போரில் வெற்றிபெற்று இறந்த உடல்களைப் பேய்களுக்கு உணவாகக் கொடுப்பதே களவேள்வி); ஒரு முகம் குறவர் குலமகளாகிய இளமை பொருந்திய, வல்லிக்கொடி போன்ற இடையினையுடைய வள்ளியுடனே மகிழ்ச்சியோடு பொருந்தியிருந்தது” என்கிறார். 

”..மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க,
பல் கதிர் விரிந்தன்று, ஒரு முகம்; ஒரு முகம்,
ஆர்வலர் ஏத்த, அமர்ந்து இனிது ஒழுகி,
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே; ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே; ஒரு முகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி,
திங்கள் போலத் திசை விளக்கும்மே; ஒரு முகம்
செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி,
கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே; ஒரு முகம்
குறவர் மட மகள், கொடி போல் நுசுப்பின்
மடவரல், வள்ளியொடு நகை அமர்ந்தன்றே…” (திருமுருகு: 91-102)

இப்பாடல் வரிகளின் பிரதிபலிப்பை நாம் அருணகிரிநாதரின் ‘ஏறுமயிலேறி விளையாடும் முகம் ஒன்றே’ பாடலில் கண்டு மகிழலாம்.

அழகுக்கும் பேரறிவுக்கும் இலக்கணமாய்த் திகழ்கின்ற முருகப் பெருமான் தன் தந்தையும் ஒப்பற்ற பரம்பொருளுமான சிவபெருமானுக்கே பிரணவத்தின் உட்பொருளை உபதேசித்து ’அப்பனுக்கே வேதம் சொன்ன சுப்பன்’ என்று அன்போடு பக்தர்களால் பாராட்டப்படுகின்றான்.
அடியார்களின் துயர் களைந்து அவர்களை வாழ்விப்பவன் முருகன்; கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய்க் கருதப்படுபவனும் அவனே என்பது அருளாளர்களின் நம்பிக்கை. ’சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை’ என்பர் பாமர மக்கள். இதே வேறு சொற்களால் ‘ஸ்வாமி என்றால் அது சுப்ரமணியரையே குறிக்கும்’ (தேவஸேனாபதி: சூர: ஸ்வாமீ கஜமுகாநுஜ)  என்கிறது ’அமரகோசம்’ எனும்  புகழ்பெற்ற வடமொழி நிகண்டு.

இப்படிப் பாமரர்கள் முதல் கல்வியில் கரைகண்ட பண்டிதர் ஈறாக அனைவரும் போற்றும் தெய்வம் உமை மைந்தனாகிய முருகவேளே! அவனைத் துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம் போம்; அதுமட்டுமா? எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர் அவன் அடியார்கள் (பதினாறு பேறுகளும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வர்) என்கிறது கந்தசஷ்டிக் கவசம்.
அளவற்ற அருளாளனான அந்தக் கந்தன், ஊமைக் குழந்தையான குமரகுருபரனைப் பார்போற்றும் ஞானக் குழந்தையாய் மாற்றியவன்; உலகப் பற்றுக்களில் மிதமிஞ்சி ஈடுபட்டு ஒழுக்கத்தைத் தவறவிட்டு, தீராத நோய்க்கு ஆட்பட்ட ஒரு மனிதனைப் பின்னாளில் தன் திருப்புகழையே எப்போதும் ஓதிக்கொண்டிருக்கும் ’அருணகிரிநாதராக்கியவன்’.
கந்தனின் அருள்பெற்றுக் ’கந்தரனுபூதி’ எழுதிய அருணகிரியாரின் பொருள் நிறைந்த அழகிய பாடலொன்று:

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. (கந்தரனுபூதி)

மனிதர்களாகிய நமக்கு குருவாகவும், கதியாகவும், நம் வாழ்விற்கு ஒளியாகவும் விளங்குகின்ற முருகனை, முத்துக்குமரனை, ஆறுருவும் ஓருருவான கந்தனை, இப்புவியில் அவன் அவதரித்த ஒப்பற்ற திருநாளாம் கார்த்திகை நிறைமதி நன்னாளில் மனமுவந்து வந்தனை செய்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்!